“மக்களுக்கு நம்பிக்கை வரனும்..” தமிழக டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் குற்ற வழக்குகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல, சிக்கலான குற்ற வழக்குகளை விசாரிக்கவும், வழக்குகளை விசாரிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் பிரத்யேக குழு அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி கஜலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், நாகராஜை, ஏ ப்ளஸ் வகை குற்றவாளியாக வகைப்படுத்தி உள்ளதாகவும், அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், 2014, 2015, 2016ம் ஆண்டுகள் முதல் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் இன்னும் புலன் விசாரணை நிலையிலேயே இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, புலன் விசாரணை முடிப்பதற்கே பத்தாண்டுகளுக்கு மேல் ஆனால் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என தாங்கள் அஞ்சுவதாக தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் புலன் விசாரணையை முடிக்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
குற்ற வழக்குகள் முறையாக கையாளப்படுகிறதா? என்பது குறித்து நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டுமெனவும், விசாரணை தாமதமாவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிக்கலான வழக்குகளை விசாரிக்கவும், வழக்குகளை விசாரிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் புலன் விசாரணைக்கு என, பிரத்யேக குழு அமைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அரசு மற்றும் டிஜிபி இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து விசாரணைக்கு எடுக்க விசாரணை நீதிமன்றம் எந்த தாமதமும் செய்யக்கூடாது எனவும் தாமதம் இருந்தால் அது குறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அல்லது சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிடலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
உரிய காரணமின்றி குற்ற வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications