பாஜக வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை நீதிபதியாக்க கூடாது- ஜனாதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் மனு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜகவின் விக்டோரியா கவுரியை நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: பாஜக வழக்கறிஞர் விக்டோரியா கெளரியை நீதிபதியாக நியமிக்க கூடாது என ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய செயலாளராக இருந்தவர் விக்டோரியா கெளரி. பாஜக நிர்வாகியாக, வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய பேச்சுகள் யூடியூப்பில் இருக்கின்றன; இப்படி வெறுப்பை தூண்டக் கூடிய நபரை நீதிபதியாக நியமிக்க கூடாது என எதிர்ப்பு எழுந்தது. மேலும் நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்கும் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தற்போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மூத்த வழக்கறிஞர்களான என்ஜிஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ் உள்ளிட்ட 21 மூத்த வழக்கறிஞர்கள் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளனர். அதில் கொலிஜியத்தின் பரிந்துரையை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்துவ அமைப்புகளா என்ற தலைப்பிலும்,
இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாச்சார படுகொலை செய்வதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது எனவும் தங்களது மனுவில் மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஆகையால் விக்டோரியா கெளரி நீதிபதி பதவிக்கு அவர் தகுதியற்றவர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விக்டோரியா கெளரியை நீதிபதியாக நியமித்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்திடமும் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
கொலிஜியம் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதா? ஜனநாயகத்திற்கு பேராபத்து -முன்னாள் நீதிபதி நாரிமன்