"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்!
உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
சென்னை: "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டு இருக்கிறார்... இதை ஓபனாகவே சொல்கிறேன்... முடிந்தால் என் மேலே கேஸ் போடுங்கள்" என்று உதயநிதி சவால் விட்டிருந்த நிலையில், இப்போது உதயநிதிக்கு, நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்கிற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கினர்.. இந்த பிரச்சாரத்தை சென்ட்டிமென்ட்டாக திருக்குவளையில் கலைஞரின் வீட்டிலிருந்தே தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில், உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார்... பகிரங்கமாகச் சொல்கிறேன்... முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள்" என்று சவால் விட்டு பேசியிருந்தார்.
இந்த பேச்சு மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.. அத்துடன் அதிமுகவுக்குள் சலசலப்பையும் உண்டுபண்ணியது.. இதையடுத்து, உதயநிதியின் பேச்சு தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்..அத்துடன், பொள்ளாச்சி பாலியல் தொல்லை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.. மேலும் வழக்கை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதேபோல திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் இணைய வழியில் தொடர்ந்த வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு சென்னை ஹைகோர்ட் ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications