அதிமுக பொதுக்குழு செல்லாது தீர்ப்புக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி மனு மீது நாளை ஹைகோர்ட்டில் விசாரணை?
சென்னை: அதிமுகவின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னையில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி அக்கட்சியின் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியால் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி கோஷ்டியின் இந்த பொதுக்குழுவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக எடப்பாடி கோஷ்டியின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அதிமுகவில் ஜூன் 23-ந் தேதி என்ன நிலை இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவில் இருதரப்பும் இணைந்து செயல்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நிராகரித்தனர். அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது.
அந்த மேல்முறையீட்டு மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம்; அவர் வகித்த பதவியும் ரத்து செய்யப்பட்டுவிட்டது; இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க அதிகாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியின் இந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெறக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications