ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 30 பேரிடம் விசாரணை- ஹைகோர்ட்டில் எஸ்.ஐ.டி தகவல்
சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் என்.ராமஜெயம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருச்சி கல்லணை சாலையில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ராமஜெயம் எதற்காக படுகொலை செய்யப்பட்டார்? ராமஜெயத்தை கொன்ற கொலையாளிகள் யார்? என்பது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிசிஐடி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்தும் இவ்வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் அண்மையில் தமிழகத்தை அதிரவைத்த 13 ரவடிகளை பட்டியலிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இன்று ஆஜரான 9 பேரில் 8 ரவுடிகள், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். தென்கோவன் என்கிற சண்முகம் என்ற ரவுடி மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொள்ள மறுத்தார். இதனைத் தொடர்ந்து வரும் 17-ந் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை மாநில போலீசாரே விசாரணை நடத்தக் கோரி அவரது மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ராமஜெயம் கொலை தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை விளக்க அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications