சென்னை ஹைகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் சங்கம் போர்க்கொடி!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்றும் கொலியம் பரிந்துரைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் லா அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா பொறுப்பேற்பு
தலைமை நீதிபதிக்கு கடிதம்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மோகன கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கான கெட்ட செய்தி என குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமானது அல்ல
நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்ற பரிந்துரையை திரும்ப பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லா அசோசியேசன், ஓய்வின் விளிம்பில் உள்ள நீதிபதி டி.ராஜாவை அவரின் ஒப்புதல் இன்றி பணியிட மாற்றம் செய்வதற்கு பரிந்துரைத்தது ஆரோக்கியமான சூழல் அல்ல எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொறுப்பு தலைமை நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 12-ந் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பணிகாலமும் செப்டம்பர் 21-ல் நிறைவடைந்து ஓய்வு பெற்றார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா செப்டம்பர் 22-ந் தேதி பொறுப்பேற்றார்.
தலைமை நீதிபதி பரிந்துரை
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி முரளிதரை நியமனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு இன்னமும் இதற்கு ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில்தான் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.