என் சம்பளத்தை போடுங்க.. அதுவும் இல்லைனா எப்படி? பாலியல் வழக்கில் சஸ்பெண்டான சிறப்பு டிஜிபி கதறல்!
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு தொடர்பான விசாரணையில், சிறப்பு டிஜிபி தனது வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ளதாகவும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் அதனை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமென ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

விசாகா குழு
இதையடுத்து அந்த சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்துக் கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு டிஜிபி வழக்கு
அதே போல வழக்கு பதிவு செய்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாகச் செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க வேண்டும் என்று கேட்டதில், ஜஜி அருண்க்கு பதிலாக ஜோஷி நிர்மல்குமார் நியமிக்கப்பட்ட போதும், சீமா அகர்வால் தொடர்ந்து கமிட்டியில் இருப்பதாகவும், சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கூட கமிட்டி தனக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

விசாரணைக்கு உத்தரவு
பெண் எஸ்.பியை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், விசாகா கமிட்டியின் அறிக்கை கூட தனக்குத் தரப்படவில்லை எனவும், விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியைப் பின்பற்றி மீண்டும் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

சம்பளம் வழங்கவில்லை
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் ராஜேஸ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாக கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஒரு அதிகாரி எந்தவித விசாரணையுமின்றி தன்னை தூக்கில் போட வேண்டும் எனப் பேசி உள்ளதாகவும், கமிட்டி நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார் அதேபோல வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் அதனை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றம் உத்தரவு
இதற்கு தமிழக அரசைப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாகா கமிட்டியின் அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டுமெனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications