நர்சிங் படிப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை சிறப்பு பிரிவில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நர்சிங் படிப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை சிறப்பு பிரிவின் கீழ் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரைச் சேர்ந்த திருநங்கை தமிழ்செல்வி 12-ம் வகுப்பு தேர்வில் 74% மதிப்பெண் பெற்றிருந்தார். நர்சிங் படிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பித்த போது அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் தமிழ்ச் செல்விக்கு இடம் வழங்கவும் உத்தரவிட்டது மாநில மனித உரிமை ஆணையம்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்ச்செல்வி வழக்கு தொடர்ந்தார். அதில் தம்மை திருநங்கையாக கருதாமல் பெண்ணாக கருதி இடம் வழங்கப்பட்டது; இதனால் தரவரிசையில் 280-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் திருநங்கையாக கருதி இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் தமிழ்ச் செல்வி. இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார்.
இந்த விசாரணையின் போது, தமிழ்ச்செல்வியை பெண்ணாக கருதியதால் 280வது தர வரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ்ச்செல்விக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கியிருந்தால் எளிதாக இடம் கிடைத்திருக்கும். தமிழ்ச் செல்வியை சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்க்காதது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆகையால் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க மருத்துவ கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications