ராஜராஜசோழன் சிலை திருட்டு வழக்கு! ரத்துசெய்ய கோரிய குஜராத் அறக்கட்டளை! தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
ராஜராஜ சோழன் சிலை கடத்தல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை: ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி குஜராத்தைச் சேர்ந்த சாராபாய் பவுண்டேஷன் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூரில் இருந்து ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அந்த சிலைகள் குஜராத்தில் இருக்கும் ஒரு அமைப்பிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதைக் கண்டறிந்த சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ராஜராஜ சோழன் சிலை
தஞ்சாவூரில் இருந்து ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷனுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சிலைகடத்தல் தொடர்பாக விசாரித்த சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், அந்த இரு சிலைகளையும், சாராபாய் பவுண்டேஷன் நடத்தி வரும் அருங்காட்சியில் இருந்து மீட்டனர்.

வழக்குப்பதிவு
மேலும், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாராபாய் பவுண்டேஷனுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிலைகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், பவுண்டேஷன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் தஞ்சையிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல என்று கூறப்பட்டிருந்தது.

வாதம்
மேலும், அந்த குறிப்பிட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தங்களுடையது என்றும் சாராபாய் பவுண்டேஷன் தங்கள் மனுவில் கூறியிருந்ததது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகினார். இந்த வழக்கில் இன்னும் சில ஆவணங்கள் பெற உள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தள்ளுபடி
மேலும், இரு சிலைகளும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான சிலைகள் தான் என 7 பேர் நேரடியாகத் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறி சாராபாய் பவுண்டேசன் மனுவை நிராகரிக்க வேண்டும் என வாதிட்டார். இதைப் பதிவு செய்த நீதிபதி, சிலைகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய மனுவையும், சிலை கடத்தல் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications