'கருணை காட்டக்கூடாது'.. பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த சுப்பையா, தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் , இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது எனக் கூறினார்.
சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது சுப்பையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்து உள்ளதாகவும், இது தொடர்பாக சுப்பையா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை எனவும் அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் வாதிட்டார். அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது எனக் கூறினார்.
பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுப்பையாவின் மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த ஜூலை மாதம் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சுப்பையாவின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications