ரேஷன் கடை பாமாயில்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு.. அதிரடியாக தள்ளுபடி
சென்னை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு வழங்குவதற்காக 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. அதேநேரம் சர்க்கரை, பாமாயில மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு லிட்டர் அளவில் 6 கோடி பாக்கெட்டுகள் பாமாயில் கொள்முதல் செய்வதற்காக, நவம்பர் 8-ம் தேதி மின்னணு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
ஸ்ரீதர் தனது மனுவில், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்ட விதிகளின்படி, 2 கோடி ரூபாய் வரை மதிப்பிலான டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேலான டெண்டர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். இது தான் நடைமுறை.
ஆனால் தமிழக அரசு 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பாமாயில் டெண்டருக்கு விண்ணப்பிக்க நவம்பர் 22-ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கி உள்ளது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது . எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எதிர்வரும் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்காக குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதற்கு சட்ட விதிகள் வழிவகை செய்கிறது என்று, விளக்கம் அளித்தார்.
தமிழக அரசின் வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அவசர தேவைக்காக குறுகிய கால டெண்டர் கோர விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று தான் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள். இதேபோல 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications