சூத்திரன் பேச்சு: ஆ.ராசாவின் 'மவனே வா வழக்கு போடு' சவாலை ஏற்று ஹைகோர்ட்டுக்குப் போனவர் மனு டிஸ்மிஸ்
சென்னை: மனுதர்மத்தில் விலைமாது மகன் சூத்திரன் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டி திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.

ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம்
ஆ.ராசாவின் இந்து பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்து பெண்களை, தமிழ்ப் பெண்களை ஆ.ராசா இழிவாகப் பேசிவிட்டார் என கண்டன போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆ.ராசாவின் உருவபொம்மைகள் இழிவுபடுத்தப்பட்டன. ஆனால் ஆ.ராசா என் மீது வழக்கு போடுங்கள்.. உங்கள் மனுதர்மம் என்ன சொல்லி இருக்கிறது என்பதை நீதிமன்றத்தில் சொல்கிறேன் என சவால்விட்டிருந்தார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையாம்
ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் அம்மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். ஆகையால் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனு டிஸ்மிஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications