ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் ஆயுதங்களுக்கு தடை- ஹைகோர்ட் கறார் உத்தரவு- மீறினால் நடவடிக்கை எடுக்க அனுமதி!
சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வரும் 6-ந் தேதி நடத்த உள்ள அணிவகுப்பு, ஊர்வலத்தில் கம்பு (லத்தி) மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. மேலும் சட்டத்தை மீறும் வகையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. அண்ணல் காந்தியடிகளை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அவரது பிறந்த நாளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது உள்நோக்கம் கொண்டது என கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஹைகோர்ட்டில் வழக்கு
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது எனவும் தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கவும் தமிழக அரசு மறுத்தது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம், நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர்ந்தது.

44 இடங்களில் ஊர்வலம்
இந்த வழக்கில் ஒருவழியாக நவம்பர் 6-ந் தேதியன்று 44 இடங்களில் அணிவகுப்பு, ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. எஞ்சிய கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 இடங்களில் பின்னர் ஊர்வலம் நடத்தலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.

அதிரடி தடை
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்று சுவருடன் கூடிய மைதானங்களில்தான் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, ஊர்வலம் நடத்தப்பட வேண்டும்; இந்த அணிவகுப்பில் லத்தி (கம்பு) மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க அனுமதி
அதேநேரத்தில் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராகவும் பேசக் கூடாது; மத ரீதியான உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிபந்தனைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்பட்டால் போலீசார் சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications