சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சி திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி? கால அவகாசம் வழங்கிய சென்னை ஐகோர்ட்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் எந்தெந்த ஆராய்ச்சி திட்டங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி பெறப்படுகிறது என விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த குழுவினர், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் B.ஜெகன்னாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வேந்தர் பதவி வகிப்பவரை மாற்ற இருப்பதாகவும், எந்தெந்த திட்டங்களுக்கு யுஜிசி நிதி உதவி பெறப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
துணை வேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பது பற்றிய இந்த வழக்கில், வேந்தர் பதவி குறித்து தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை டிசம்பர் 18க்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications