ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மூன்று திருப்பங்கள்.. நிதியுதவி அளித்த பெண்ணுக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு நிதியுதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது. அதே சமயம், வழக்கறிஞர் ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி கே. ராஜசேகர் , மற்ற 12 பேருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ததோடு, மேலும் இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் தமிழக காவல்துறையினரால் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மீதமுள்ளவர்களில் சிலர் தற்போது ஜாமீன் பெற்றுள்ளனர், சிலர் சிறையில் உள்ளனர்.

காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, இந்தக் கொலையில் மூன்று வெவ்வேறு தரப்பினர் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார்கள்.
நாகேந்திரன் (A1): சிறையில் இருந்தபடியே இந்தக் கொலைக்குத் திட்டம் தீட்டியதாக இவர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் சமீபத்தில் (அக்டோபர் 2024) உடல்நலக்குறைவால் காலமானார்.
அஸ்வத்தாமன் (A3): இவர் நாகேந்திரனின் மகன் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி. இவரும் இந்தச் சதியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
சம்போ செந்தில் (A2): இவர் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கிய ரவுடி. இவர்தான் இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று காவல்துறை கருதுகிறது.
பொன்னை பாலு: இவர் ஆற்காடு சுரேஷின் சகோதரர். தனது சகோதரர் கொலைக்குப் பழிவாங்கவே இந்தக் கொலை நடந்ததாகக் கூறி, முதலில் சரணடைந்த 8 பேர் கொண்ட கும்பலில் இவரே முக்கியமானவர் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தனது கணவர் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கத் துடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எஸ். பொற்கொடிக்கு நீதிபதி கே. ராஜசேகர் ஜாமீன் வழங்கி உள்ளார். பொற்கொடி தனது கணவரின் 10 சவரன் தங்க வளையலை அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த ₹3.56 லட்சத்தை கொலையாளிகளுக்கு வாகனம் மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக அவர் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு எஸ். பொற்கொடிக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்றத்தின் கருத்து என்ன
கொலையாளிகளுடன் இவர் தொடர்பில் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும், கொலையில் இவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றும், கொலைக்கான பணத்தை உருவாக்கிக் கொடுத்தது மட்டுமே இவர் மீதான குற்றச்சாட்டு என்றும் நீதிபதி கே. ராஜசேகர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞருக்கு ஜாமீன் மறுப்பு
19-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கே. ஹரிதரனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மற்றவர்களுக்குப் பணம் பரிமாற்றம் செய்தது மற்றும் 6 செல்போன்களை உடைத்துக் கொசஸ்தலை ஆற்றில் வீசி ஆதாரங்களை அழித்தது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது.
12 பேருக்கு ஜாமீன் ரத்து
ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட 14 பேரில், 12 பேரின் ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை செஷன்ஸ் நீதிமன்றம் சரியாகக் கவனிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, அந்த 12 பேரும் மார்ச் 6, 2026-க்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜாமீன் உறுதி செய்யப்பட்டவர்கள்
அஞ்சலை (A29) மற்றும் எஸ். மலர்க்கொடி (A30) ஆகிய இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் உயர்நீதிமன்றம் தலையிடவில்லை; அவர்களின் ஜாமீன் உறுதி செய்யப்பட்டது.
சரணடைய வேண்டிய 12 பேர்
அஸ்வத்தாமன் (A3), பிரதீப் (A16), ஹரிஹரன் (A17), சதீஷ்குமார் (A20), சிவா (A21), அப்பு என்கிற புதூர் அப்பு (A22), முகிலன் (A23), நூர் என்கிற விஜய் (A24), விக்னேஷ் என்கிற அப்பு (A25), ராஜேஷ் (A26), கோபி (A27) மற்றும் குமாரா என்கிற செந்தில்குமார் (A28).












Click it and Unblock the Notifications