ரூ.20 கோடி தராமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது: ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ரூபாய் 20 கோடியை வரும் 13 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், கங்குவார் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது 'கங்குவா' திரைப்படம். கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்த டெடி 2 , தங்கலான் உள்ளிட்ட சில படங்களின் தயாரிப்பு செலவுகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 99 கோடி கடனாக பெற்றுள்ளார்.

அதில் ரூபாய் 45 கோயை திருப்பி கொடுத்த நிலையில் மீதமுள்ள 55 கோடி இன்னும் கொடுக்காமல் ஒப்பந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பாக்கி தொகையினை கொடுக்காமல் நடிகர் சூர்யா நடித்து வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிடக்கூடாது. தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிடக்கூடாது எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது அண்மையில் விசாரணை நடந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் கொடுக்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால் தங்கலான் படத்தை ஓடிடி-யில் வெளியிட ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீதமுள்ள தொகை நாளைக்குள் திரும்ப செலுத்தப்படும் என உறுதி தெரிவித்தார்.
'கங்குவா' படம் வரும் 14 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, படத்தின் ரிலீஸுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்னொரு வழக்கு ரூபத்தில் கங்குவா படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் வந்துள்ளது.

அர்ஜுன் லால் என்பவரிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் வழக்கு தாக்கல் செய்தார். அர்ஜுன் லால் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்படவே, அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட அவரது சொத்துகளை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் அர்ஜுன் லாலிடம் கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
அந்த அடிப்படையில், சொத்தாட்சியர் தாக்கல் செய்த வழக்கில் ரூபாய் 20 கோடியை வரும் 13 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் 'கங்குவா' திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications