Hit & Run வழக்கு ஏன் போடல? விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிபதி கேள்வி
சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனம் மோதி இருவர் விழுந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், இது கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் நடந்துள்ளதாக நீதிபதி செந்தில் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டம் கூட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி செந்தில் குமார், விஜய் பிரச்சாரம் செய்த வாகனம் இடித்து விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில் இடித்துவிட்டு ஓடியதாக விஜய்யின் பிரச்சார வாகனம் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது.
ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை.. அதிர்ச்சியாக இருக்கிறது.. வீடியோக்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய்யின் பிரச்சார வாகனம் இரு சக்கர வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக நீதிபதியே விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications