தன் பாலின உறவு வழக்கு.. நீதிபதியின் 'கறார்' நேர்மை.. 'பாடம்' படித்த பிறகே தீர்ப்பு
சென்னை: தன் பாலின உறவு குறித்த சிக்கலான வழக்கு ஒன்றில், அந்த உறவு குறித்த புரிதலுக்காக, உளவியலாளரின் ஆலோசனைகள் பெற அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியுள்ளார் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவர்.
செக்ஸ் கல்வியில் உண்மையில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சப்ஜெக்ட் தன் பாலின உறவுகள். ஆம்! ஆணுக்கு ஆண் மீது வரும் ஈர்ப்பு. பெண்ணுக்கு பெண் மீது வரும் ஈர்ப்பு.
எதிர்பாலினம் மீது ஈர்ப்பு வருவதே மனித இயல்பு. இந்த இயற்கை விதியை மீறும் தன் பாலின உறவுகள் விந்தைதான். உலகில் பல நாடுகள் இந்த உறவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்துவிட்டன.

லெஸ்பியன் ஜோடி
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன் பாலின உறவு குறித்த வழக்கு ஒன்றில், தனக்கே ஆலோசனை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். தங்கள் மகளை காணவில்லை பெற்றோர் புகாரளிக்க, ஒரு 'லெஸ்பியன்' ஜோடி, தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த லெஸ்பியன் ஜோடியில் ஒரு பெண், அந்த பெற்றோரின் மகள். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தான் விசாரித்து வருகிறார்.

ஒரு உதாரணம்
இந்த மனு விசாரணைக்கு வந்த போது பேசிய நீதிபதி, இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமாகவும் , பச்சாத்தாபத்துடன் கையாளப்பட வேண்டும். சமுதாயம், இப்போது கூட, தன் பாலின உறவை எப்படி பார்க்கிறது என்பதை அறிய இந்த வழக்கு ஒரு உதாரணம் என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக, இந்த ஒரு அரிதான தருணத்தில், தன் பாலின உறவுகள் குறித்த தனது சொந்த கருத்துக்களைப் பெற முயற்சிப்பதாக நீதிபதி ஒப்புக்கொண்டார்.

சாத்தியமில்லை
அதுமட்டுமின்றி, இந்த உறவு குறித்த புரிதலுக்காக உளவியலாளர் ஒருவரின் ஆலோசனை பெறப் போவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தீர்ப்பில், "நான் எனக்கு இன்னும் சில கால நேரம் கொடுக்க விரும்புகிறேன். இந்த வழக்கில், எனது தீர்ப்பின் வார்த்தைகள் என் இதயத்திலிருந்து வர வேண்டும், என் தலையிலிருந்து அல்ல. இந்த தன் பாலின உறவு குறித்து நான் முழுமையாக தெரிந்திருக்கவில்லை என்றால் அந்த தீர்ப்புக்கு சாத்தியமில்லை.

அதன் பிறகே தீர்ப்பு
இதற்காக நான், ஒரு உளவியலாளருடன் உளவியல் கல்வி பெற விரும்புகிறேன். ஒரு தொழில்முறை நிபுணருடனான இதுபோன்ற ஒரு அமர்வு, தன் பாலின உறவுகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று உணர்கிறேன். உளவியல் கல்விக்குப் பிறகு நான் தீர்ப்பு எழுதினால், அந்த வார்த்தைகள் என் இதயத்திலிருந்து விழும் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications