கூலி, வார் 2 கிடக்க! சன்டே அன்று மனுஷி படத்தை பார்வையிடும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் மனுஷி படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அடுத்து வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அந்த படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பார்வையிடுகிறார்.
நடிகை ஆன்ட்ரியா நடிப்பில் மனுஷி என்ற படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராமஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அந்தக் காட்சிகள், வசனங்களை நீக்க சென்சார் போர்டு (தணிக்கை குழு) உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விதிகளுக்கு முரணாக சென்சார் போர்டு இந்த ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளது. 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்குமாறு கூறியதாக தயாரிப்பாளர் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மாற்று நிவாரணம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு உயர்நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு கூறிய காட்சிகளும் வசனங்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லவிதமாக இருக்கிறதா, விதிமீறல் இல்லாமல் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் மனுஷி படத்தை பார்வையிட ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
படம் பார்க்கும் போது மனுஷி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தீர்மானித்திருந்த சென்சார் குழுவும் படத் தயாரிப்பாளர் வெற்றி மாறனும் உடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications