வேலூரை உலுக்கிய துப்பாக்கி சூடு.. மச்சினியை கொன்ற சகோதரி கணவன்.. ஆயுள் தண்டனையை குறைத்த ஹைகோர்ட்
சென்னை: குடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, மனைவி ராணியை அண்ணாமலை தினமும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராணி, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பல மாதங்களாக அவர் தாய் வீட்டில் தங்கியிருந்ததால், ராணியை அழைத்து வருவதற்காக அண்ணாமலை சென்றுள்ளார்.

அப்போது, ராணியை அண்ணாமலையுடன் அனுப்பி வைக்க அவரது சகோதரி உமா சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கும், உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் உமாவை நான்கு முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே உமா உயிரிழந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மகளிர் நீதிமன்றம், அண்ணாமலைக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.சந்திரசேகரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர், அண்ணாமலை கொலை செய்ததாக கூறப்படும் காரணத்தில் உண்மையில்லை என்றும், சாட்சிகளும் முறையாக இல்லை எனவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உமாவை திட்டமிட்டு அண்ணாமலை கொலை செய்யவில்லை என்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications