ஞானசேகரன் சொத்துக்குவிப்பு வழக்கு.. முன்னாள் MLA-வை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது சென்னை ஐகோர்ட்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வேலூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த ஞானசேகரன், வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை நடைபெற்று வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வருமான வரி கணக்கில் சொத்துகளை குறிப்பிட்டுள்ளதால் அவை சட்டபூர்வமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களாக கருத முடியாது என்றும் முன்னாள் எம்எல்ஏவின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரம் ஏதும் இல்லை என்றும் வாதிட்டார். மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தரப்பில், வருமானவரித்துறை கணக்கின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது என்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக கூறப்படக்கூடிய காலகட்டத்திற்கு முன்பே இருவருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்ததாகவும் வாதிட்டார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்றும் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், உத்தரவை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது, சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என வேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications