நீங்கள் மனுதாரரே இல்லையே! ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக திருமா வழக்கு.. அவசரமாக விசாரிக்க மறுப்பு
சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் இதில் சில புதிய கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமாவளவன் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

என்ன முறையீடு
உயர் நீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என நீதிபதி இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீங்கள் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாத போது உங்கள் மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கேள்வி
அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். முன்னதாக திருமாவளவன் தனது மனுவில், ஆர் எஸ் எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது ஆர் எஸ் எஸ்.

மனுவில் என்ன இருக்கிறது
மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை
தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி தரவில்லை.

அனுமதி இல்லை
இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில்தான் சென்னை உயர் நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி வழங்கியது.

அனுமதி
அந்த மனுவில், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. இது விதி மீறல், என்று ஆர்எஸ்எஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல்கள் அளிக்கவில்லை. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது .காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. அவர்கள் செல்லும் வழியை குறிப்பிட வேண்டும். அதனால் அவர்கள் குறிப்பிடவில்லை என்பதால் அனுமதிக்க முடியாது என்று வாதம் வைத்தது.

கட்டுப்பாடு
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் இன்னும் தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. நாளைதான் அனுமதி கொடுக்க கடைசி நாள். இந்த ஊர்வலத்தில், ஊர்வலத்தில் சாதி, மதம், தனி நபர் குறித்து தவறுதலாக பேச கூடாது. மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட கூடாது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேச கூடாது. எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேசவே கூடாது, என்று உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications