காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. திமுக முன்னாள் எம்.பி வழக்கில் சென்னை ஐகோர்ட் வேதனை
சென்னை: பெரும்பாலான வழக்குகளின் விசாரணை காவல்துறையின் மெத்தனப்போக்கால் தாமதமாவதால், போலீசார் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என புகார்தாரரான காட்ஃப்ரே வாஷிங்டன் நோபிள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் எம்.பி ஞானதிரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஆறு மாதங்களாக வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு ஆய்வாளர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். "வழக்கின் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட சம்மனை, மார்ச் வரை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார். புகார்தாரர் நோபிள், தனக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்ற சம்மனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டி.ஜி.பிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வழக்குப்பதிவு செய்வதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில், சம்மன் அனுப்புவதில், சாட்சிகள் பதிவு செய்வதில் தாமதம் செய்யக் கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. உள்ளிட்ட அனைவரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக திருநெல்வேலி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கி, ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கை விரைந்து முடிக்க காவல் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதே போல, புகார்தாரர் நோபிளுக்கு வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்கும்படி திருநெல்வேலி காவல் ஆணையருக்கு உத்தரவிடும்படி, தமிழக டி.ஜி.பிக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீதிபதி தனது உத்தரவில், பெரும்பாலான வழக்குகளின் விசாரணை தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம். காவல் துறையினரின் மெத்தனப் போக்கால் அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று நீதிபதி வேல்முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications