அதிமுகவில் எடப்பாடிக்கு சிக்கல்? சசிகலா வழக்கில் டிச. 4ஆம் தேதி தீர்ப்பளிக்கும் சென்னை ஐகோர்ட்
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு மீது வரும் திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொதுச் செயலாளராகவும், டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2017ல் நடந்த பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வழக்கு: அதன் பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர். இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
சசிகலா வாதம்: அப்போது சசிகலா தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை என்றும் அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது. முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராகத் தான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் சசிகலா மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிடப்பட்டது.
திங்கள்கிழமை தீர்ப்பு: அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications