முன்கூட்டியே விடுதலை.. விதிகளை மறுஆய்வு செய்யவேண்டும்.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அட்வைஸ்
சென்னை: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குமார் என்பவர், முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ராஜ்குமாரை முன்கூட்டி விடுதலை செய்ய அரசாணை விதிகளில் இடமில்லை. 2023 செப்டம்பரில் அவர் 14 ஆண்டுகள் சிறைவாசத்தை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜ்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை மனுதாரர் ஏற்கனவே அனுபவித்து விட்டார். குறைந்த தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டால், சம்பந்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டி விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ராஜ்குமாரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
அதேசமயம், குறைந்த தண்டனை விதிக்க வகை செய்யும் சில சட்டப்பிரிவுகளில் தண்டிக்கப்பட்டிருந்தால், முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளதால், முன் கூட்டி விடுதலை செய்ய தகுதியிழப்பு செய்யும் இந்த விதிகளை அரசு மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications