வெளிநாட்டவர் இந்தியாவில் குவியப் போகிறார்கள்.. மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் கணிப்பு
சென்னை: கொரோனா பதற்றம் தணிந்தபின்னர் வெளிநாட்டினரின் சுற்றுலா தேர்வாக இந்தியா முதலிடத்தில் இருக்கும் என மதுரா டிராவல்ஸ் அதிபரும், தமிழக சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவருமான வி.கே.டி. பாலன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகள் லாக்டவுனில் உள்ளதால் சுற்றுலாத்துறை சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகள் பற்றி நாம் அவரிடம் பேசினோம்.. அதற்கு அவர் அளித்த விவரம் பின்வருமாறு;
கேள்வி: கொரோனாவால் சுற்றுலாத்துறை அடைந்துள்ள வீழ்ச்சியை எப்படி கருதுகிறிர்கள்..?
பதில்: சுற்றுலாத்துறைக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது, இது ஒரு தற்காலிக இடைவெளி தானே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. பறவைகளை கூண்டில் இருந்து திறந்துவிடுவதை போல் லாக்டவுன் முடிந்த பிறகு மனிதர்கள் நினைத்த இடங்களுக்கு பறக்கத்தான் போகிறார்கள். மனிதனின் உளவியல் படி ஒரே இடத்தில் யாராலும் இருக்க முடியாது. இப்போது கூட எங்கள் நிறுவன ஊழியர்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் லாக்டவுன் முடிந்த பிறகு மைசூரு செல்ல வேண்டும், திருக்கடையூர் செல்ல வேண்டும் என ஏற்பாடு செய்யக்கூறுகிறார்கள். விமானசேவைகள் இல்லாததால் வெளிநாட்டு பயண முன்பதிவு சேவைகள் மட்டும் தற்போதைக்கு இல்லை.
கேள்வி: லாக்டவுனால் எப்படி வீழ்ச்சி இல்லை எனக் கூறுகிறீர்கள்.. கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அல்லவா?
பதில்: பொருளாதார பாதிப்புகள் வரத்தான் செய்யும். அதற்காக அரசிடம் பணம் கொடுங்க, உதவுங்கன்னு கேட்பது ஏற்புடையதாக இருக்கது. ஏனென்றால் இவ்வளவு நாட்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் சம்பாதித்தோம் அல்லவா அப்போது வந்த வருமானங்களை நாட்டிற்காகவோ, அரசுக்காகவோ கொடுத்தோமோ என்று சிந்தித்து பார்க்க வேண்டும். வரி மட்டும் தானே கட்டி வருகிறோம். இப்போது கூட 6 மாத காலத்திற்கு ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என சுற்றுலாத்துறை சங்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர். சங்கத் தலைவர் என்ற முறையில் நானும் அந்த கோரிக்கையை முன்வைத்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் உடன்பாடில்லை. பிரசவத்திற்கு 3 மாத காலம் விடுப்பு எடுத்துக்கொண்டு வலியுடன் குழந்தை பெற்றெடுப்பதை போல், இந்த லாக்டவுனை சகித்துக்கொண்டு கொரோனாவை ஒழிக்க வேண்டும்.
கேள்வி: லாக்டவுனுக்கு பிறகு சுற்றுலாத்துறையின் பாதை எதை நோக்கி இருக்கும்?
பதில்: லாக்டவுன் முடிந்த பிறகு, இன்னும் சொல்லப்போனால் கொரோனா பதற்றம் எல்லாம் தணிந்த பின்னர் பெரும்பான்மையான வெளிநாட்டினர் இந்தியாவுக்கு படையெடுப்பார்கள். இது எனது அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன். ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளுக்கோ, அமெரிக்காவுக்கு செல்ல அடுத்த 6 மாத காலத்திற்கு யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால் அதே வேளையில் கொரோனா விவகாரத்தில் அதிக பாதிப்பு ஏற்படாத இந்தியாவை இப்போதே பல நாட்டினரும் டிக் அடித்து வைத்துள்ளார்கள். மற்ற நாடுகளுக்கு எப்படியோ தெரியவில்லை இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும், 3 மாதத்தில் நிலைமை மாறும்.
கேள்வி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பயணங்கள் செல்வோர் எண்ணிக்கை எப்படி இருக்கும்..?
பதில்: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அடுத்த 6 மாதங்களுக்கு கணிசமாக குறையும். காரணம் இன்று இந்தியர்கள் அதிகம் செல்லக்கூடிய பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கொரோனாவால் அதிக பாதிப்புகளையும், சேதத்தையும் சந்தித்துள்ளன. இதனால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை குறையும், ஆனால் அங்கிருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கேள்வி: ஏப்ரல், மே, மாத சுற்றுலாவுக்காக முன் கூட்டியே திட்டமிடப்பட்ட பயணிகளுக்கு அவர்களுடைய பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறதே..?
பதில்: இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகளுக்காக விமான டிக்கெட், ஹோட்டல்கள், பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் மட்டும் ரூ.15,000 கோடி முடங்கியுள்ளது. நான் சொல்வது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இவ்வளவு பெரிய தொகை முடங்கியுள்ளது. அதனை ஹோட்டல் நிர்வாகம், விமான நிறுவனங்களிடம் பேசி அந்த தொகையை திரும்பபெற்று சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கும் வேலை நடந்து வருகிறது. இதில் பாதி பணிகள் முடிந்துவிட்டன், இன்னும் பாதி பணிகள் மட்டும் உள்ளது.