சொன்னதை செஞ்சுட்டாரே... விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதுரை ஆதீனம்
சென்னை: தமிழ்நாடு பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட சென்னை விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை மதுரை ஆதீனம் சந்தித்து பேசினார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
Recommended Video

பிரதமர் மோடி
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

தமிழை புகழ்ந்த பிரதமர்
இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இதில் தமிழ்நாட்டுக்கான 6 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். "தமிழ்நாடு வருவது எப்போது மகிழ்ச்சிக்கு உரியதே. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது.

தமிழக வீரர்கள்
சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார். அண்மையில் காது கேளாதோருக்கான குழுவினருக்கு எனது இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்தபோட்டியில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு. நாம் வென்ற 14 பதக்கங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர்களின் பங்கு இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

இலங்கை உதவி
இலங்கை கடினமான சூழ்நிலையை கடந்துகொண்டிருக்கிறது. அங்கே இருக்கும் சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. நிதி உதவி, எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய உதவிகளை இந்தியா அளித்து வருகிறது. பல இந்திய அமைப்புகள், தனி நபர்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

யாழ்பாணம்
இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச அரங்கில் இந்தியா பேசி வருகிறது. ஜனநாயகம், ஸ்திரதன்மை, பொருளாதார மீட்பு தொடர்பாக இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும். இலங்கையின் யாழ்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்ற எனது பயணத்தை மறக்க முடியாது. யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. உடல்நலம், போக்குவரத்து, கலாச்சாரம் சார்ந்த உதவிகளை இந்தியா வழங்குகிறது." என்றார்.

மதுரை ஆதீனம்
இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை மதுரை அதீனம் சந்தித்து பேசினார். தருமபுர ஆதீனத்தின் பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து சில நாட்களுக்கு முன் பேசிய மதுரை ஆதீனம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications