திராவிட "மாடல்"..ஆங்கிலம் ஏன்? சரியான தமிழ் சொல் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
சென்னை: திராவிட மாடலில் உள்ள 'மாடல்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் என்ன?" என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த முக்கியமான சொல்லாடலை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாமே எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "திராவிடியன் ஸ்டாக்" என பயோவை மாற்றினார். தொடர்ந்து தனது பேச்சின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையையும் முதல்வர் பயன்படுத்தி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினை பின்பற்றி திமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் 'திராவிட மாடல்' என்ற சொல்லாடலை பயன்படுத்தி பேசுவதோடு சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
திராவிட மாடல் என்ன? அதே நேரத்தில் வலதுசாரி சிந்தனையாளர்கள், திராவிட மாடல் என்றால் என்ன? எனவும் இது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து மருத்துவரும் , திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில் குமார் விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற லோக்சபாவில் பட்டியிலடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் திருத்த மசோதா குறித்து பேசியபோது விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் யாரேனும் ஒருவர் தன்னுடைய சாதிப் பெயரை மாற்றி இயற்பெயர் மட்டும் வைத்துக்கொண்டால், அது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார் செந்தில்குமார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத உத்தரவிட கோரிய வழக்கு விசாரணையில் திராவிட மாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'மாடல்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழ்நாடு அரசின் அரசாணையின் படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" என கேள்வி எழுப்பினர். மேலும் அது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதி ஒத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, "தற்போது 'திராவிட மாடல்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. திராவிட மாடலில் உள்ள 'மாடல்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் என்ன?" என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த முக்கியமான சொல்லாடலை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாமே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.