மதுரை திமுக நிர்வாகி VK குருசாமியை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் கைது!
சென்னை: ரவுடி வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுரை திமுக நிர்வாகி வி.கே. குருசாமியை மங்களமேடு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பிறகு குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி முன்னாள் திமுக மண்டலத் தலைவராக பதவி வகித்தவர் வி.கே. குருசாமி. இவருக்கும், அதிமுக நிர்வாகி ராஜபாண்டிக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே குடும்பப் பகையாக நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, இரு தரப்பையும் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். குருசாமி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், பிரபல ரவுடியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைக்காளியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த மாதம் அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
பெரம்பலூர் டோல்கேட் அருகே வந்த போது வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், வெள்ளைக்காளி உயிர் தப்பினார். போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோதே ரவுடியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ரவுடி கொட்டு ராஜா தலைமையிலான கும்பல்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசாரை தாக்க முயன்ற போது என்கவுன்ட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுரை திமுக நிர்வாகி வி.கே. குருசாமியை மங்களமேடு போலீசார் இன்று கைது செய்தனர். பிறகு குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வி.கே. குருசாமியுடன் சேர்த்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த வாரம் வி.கே. குருசாமி மதுரையில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பல பொய் வழக்குகளை போலீசார் என்மீது பதிவு செய்துள்ளனர். ஆனால் பெங்களூரில் என்னை வெட்டியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நான் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் சட்டத்தை மீறி போக மாட்டேன் என உருக்கமாகப் பேசி இருந்தார் விகே குருசாமி.












Click it and Unblock the Notifications