ஆளுநர் பதவி வேணும்னா பாஜக ஆபிஸ் போங்க! எதுக்கு சமஸ்கிருதம்,இந்தினு பேசிகிட்டு! சு.வெங்கடேசன் சுளீர்!
சென்னை : அனைத்து மொழிகளின் தாய் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது என இஸ்ரோ தலைவர் கூறியிருந்த நிலையில் மாநிலங்களவை எம்பி, ஆளுநர் பதவி வேண்டுமென்றால் பாஜக அலுவலகம் செல்லுங்கள் எதற்காக மொழிகளை பற்றி பேச வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழிகள் குறித்து மத்திய அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு வழிகளில் திணிப்பு முயற்சி மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமஸ்கிருத மொழி குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசிய கருத்துகள் மிகக் கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வே பணிக்கு பெங்களூர் தேர்வர்களை நியமிக்க முடிவு.. சு வெங்கடேசன் எம்பி கடும் எதிர்ப்பு
இஸ்ரோ தலைவர்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் படமாக்கப்பட்டுள்ள அறிவியல் படமான யானம்' திரைப்படம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. இஸ்ரோ தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் வாழ்வியல் குறித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் ராக்கெட் செலுத்தும் போது சந்தித்த சவால்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
சோம்நாத்
இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சமஸ்கிருத மொழி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும், பல்வேறு அறிவியல் சார்ந்த பதிவுகளை சமஸ்கிருதம் பதிவிட்டு உள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்து திராவிட ஆரிய மொழிகள் தோன்றி உள்ளன. குறிப்பாக நம் எழுத்துக்கள் சமஸ்கிருத மொழியைப் போலவே காணப்படும் அந்த தொடர்பை நாம் விட்டுவிட கூடாது. எனவே சமஸ்கிருத மொழியை முன்னிறுத்தி செல்ல வேண்டும்" எனப் பேசினார்.
சு வெங்கடேசன்
இந்நிலையில் அனைத்து மொழிகளின் தாய் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது என இஸ்ரோ தலைவர் கூறியிருந்த நிலையில் மாநிலங்களவை எம்பி ஆளுநர் பதவி வேண்டுமென்றால் பாஜக அலுவலகம் செல்லுங்கள் எதற்காக மொழிகளை பற்றி பேச வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.
கடும் கண்டனம்
அதில்,"இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எம்பி ஆளுநராக வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ் பாஜக அலுவலகத்திற்கு சென்று யார் காலையாவது பிடியுங்கள் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மொழிகளை யார் அவமதித்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்" என வெங்கடேசன் கூறியுள்ளார்.