மதுரை டூ சென்னை.. நீங்க பாஸ்போர்ட் எடுக்கணுமா? இந்த நாளில் பாஸ்போர்ட் வெப்சைட் இயங்காது.. அறிவிப்பு
சென்னை: தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இணையதளம் இயங்காத நேரம் என்னென்ன? என்பது குறித்து அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகங்களில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: "பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது. ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆவணங்கள்: அதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் ஆவணம் சரி பார்ப்பு நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகிறது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2024 ஆகஸ்ட் 29 வியாழன் இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்கள் நேரமுள்ள பிற நாட்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேவை: அதேபோல, சென்னை மண்டல அலுவலகம் பாஸ்போர்ட் சேவை இணையதளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறித்தும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், "தொழில் நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆகஸ்ட் 30-ந் தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 30-ந் தேதி சந்திப்புக்காக உறுதி அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கான சந்திப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 30 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது" என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி: இதுபோலவே, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொடர் எண்களும் தரப்பட்டுள்ளன.. அதில், "நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக வருகிற 30-ந் தேதி ஒரு நாள் மட்டும் மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்து விதமான பாஸ்போர்ட் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அன்றையதினம் முன்பதிவு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்கள் விரும்பும் வேறு நாட்களுக்கு முன் அனுமதி மாற்றி தரப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது முன்பதிவு தேதியை தங்களுக்கு ஏற்ற நாளில் மாற்றிக்கொள்ளலாம்.
தொலைபேசி எண்: மதுரை, நெல்லை பாஸ்போர்ட் சேவை மையங்கள், தபால் பாஸ்போர்ட் சேவை மையங்கள் என அனைத்தும் அன்றையதினம் இயங்காது. அத்துடன், மதுரை பாரதி உலா வீதியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக சேவைப்பிரிவும் செயல்படாது. இது குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் 0452-2521205 மற்றும் 0452-2521204 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications