தங்கம் தென்னரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் எப்படி? கவனிக்க வைத்த ஐந்து விஷயங்கள்
சென்னை: தமிழகத்தின் நிதியமைச்சரான பிறகு தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார் . நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுதான் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பட்ஜெட் உரையை வாசித்து இருந்தார்.

இன்னும் இரண்டு மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பட்ஜெட்டில் பணக்கார்களைவிட, நடுத்தர வர்க்கத்தை விட, அடித்தட்டு ஏழை மக்களை குறிவைத்து பல்வேறு திட்டங்களை வெளியிட்டிருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
கலைஞர் வீடு: அவற்றில் முக்கியமானது கலைஞரின் வீடு கட்டும் திட்டம். ஏற்கனவே உள்ள திட்டம் என்ற போதிலும். இதற்கான திட்டத்தின் தொகை 3.5 லட்சம் என்கிற அறிவிப்பு கவனிக்க வைத்துள்ளது. குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்றும் ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் மெட்ரோ: அதேபோல் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்த அறிவிப்பு பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது,. சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் விரிவாக்கம் என்பது சென்னை நகரை பொறுத்தவரை தவிர்க்க முடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னும் 3 ஆண்டுகளில் 2ம் கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் ஓடும் போது சென்னைக்கு எந்த அளவிறகு அதன் தாக்கம் இருக்கும் என்பது நிச்சயம் தெரியும். மத்திய அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 உதவி தொகை: அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிற அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்க வேண்டிய திட்டமாக உள்ளது.. இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அதிக வாய்ப்பு உருவாகும் என்று தெரிகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிக்சை : நாட்டிலேயே முன்னோடியான இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மேலும் மேம்படுத்திட தமிழக அரசு தீவிரமாக முனைந்துள்ளது. சிகிச்சை செலவுகளைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகையை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேரத்தில் செலவு 2 லட்சம் வரை ஏற்பட்டாலும் அந்த தொகையை தமிழக அரசே செலுத்தும்.
கோவையில் நூலகம்: கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும் என்றும் இது 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு இன்றைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.. ஏற்கனவே கலைஞர் நூலகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கோவையிலும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications