ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை! விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? முக்கிய அறிவிப்பு வெளியாகிறது
சென்னை: ஆளுநர் உரையுடன் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியான ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இன்று கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா? என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், உடனே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்துதான் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

இப்படி இருக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று விஜய் பேசியிருந்தார். தற்போது தவெக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. விஜய் முதலமைச்சராக இருக்கிறார். இப்பினும் கடந்த 2 மாதங்களாக ரூ.1000 மட்டுமே உரிமைத் தொகையாக வரவு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், ரூ.2500 குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திமுக அரசை போலவே, 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படுமா? அல்லது விஜய் வாக்குறுதி கொடுத்ததை போல உடனே உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படுமா? என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
நேற்று முன்தினம் தவெக அரசு, 2021-2026ம் ஆண்டு வரை தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தின் தலையில் ரூ.10-13 லட்சம் கோடி வரை கடன் இருப்பதாகவும், பக்கத்து மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக கடனுடன் பிறக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மட்டுமல்லாது, தமிழகத்தின் சொந்த வருவாய் கடுமையாக குறைந்தைிருப்பதையும் தவெக குறிப்பிட்டிருந்தது.
நிதி நிலைமை இப்படி இருக்கையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 உயர்த்தி வழங்கப்பட்டால், மாநிலத்தின் கடன் இன்னும் அதிகமாகும். ஏற்கெனவே கடன் குறித்து பேசும் விஜய் அரசு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மேற்கொண்டு கடன் வாங்கப்போகிறதா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications