செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.. போஸ்ட் ஆபீஸ் கணக்கு முடக்கப்படலாம்! உடனே இதை செய்யுங்கள்
சென்னை: இந்திய அரசின் மிகச்சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்றான செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் உன்னதமான நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.. தற்போது இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான புதிய விதிமுறை மாற்றங்கள் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.. அதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்டி, செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளை பராமரிப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன..

செல்வ மகள் சேமிப்பு திட்டம்
குறிப்பாக ஒரு பெண் குழந்தையின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மட்டுமே கணக்கைத் தொடங்கவும் நிர்வகிக்கவும் முடியும் என்ற விதியை அரசு மிகத்தீவிரமாக அமல்படுத்தியுள்ளது.. ஒருவேளை குழந்தையின் தாத்தா பாட்டி அல்லது மற்ற உறவினர்கள் கணக்கைத் தொடங்கி பராமரித்து வந்தால் அத்தகைய கணக்குகள் சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது பெற்றோரின் பெயருக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்..
அப்படி மாற்றம் செய்யப்படாத கணக்குகள் விதிமீறலாகக் கருதப்பட்டு அவை முடக்கப்படுவதற்கும் அல்லது மூடப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வட்டி சிறந்த சேமிப்பு திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சேமிப்பு வசதியைப் பெற முடியும்.. தற்போது வழங்கப்பட்டு வரும் 8.2 சதவீத வட்டி விகிதம் என்பது சந்தையில் உள்ள மற்ற சேமிப்புகளை விட மிக அதிகமாகும்..
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் என்றாலும் 15 ஆண்டுகள் வரை மட்டுமே நாம் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு அரசு வட்டித் தொகையைத் தொடர்ந்து கணக்கில் சேர்த்துக்கொண்டே இருக்கும்.. தற்போதைய புதிய விதிகளின்படி கணக்கு வைத்திருப்பவர் மற்றும் பாதுகாவலரின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
ஆவணங்கள் - தபால் நிலையம்
ஒருவேளை ஆவணங்களில் குளறுபடி இருந்தாலோ அல்லது தகுதியற்ற நபரால் கணக்கு நிர்வகிக்கப்பட்டு வந்தாலோ அத்தகைய கணக்குகள் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும்.. எனவே தபால் நிலையத்திலோ அல்லது வங்கியிலோ கணக்கு வைத்துள்ளவர்கள் தங்கள் கணக்கின் தற்போதைய நிலையைச் சரிபார்த்து சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றுவது அவசியமாகும்..
குறைந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கப்படும் இந்தத் திட்டம் பெண்களின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்கு பெரும் நிதி உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.. அரசின் இந்த புதிய மாற்றங்கள் திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தகுதியானவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளன..












Click it and Unblock the Notifications