திமுக மாணவர் அணி நிர்வாகிகள் அதிரடி மாற்றம்.. மாணவரணி செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம்!
சென்னை: திமுக மாணவரணி நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திமுக மாணவரணி தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, மாணவரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திமுக மாணவரணி செயலாளராக இருந்த சி.வி.எம்.பி எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த நிர்வாகிகளை அப்பொறுப்புகளில் இருந்து விடுவித்து மாற்று பொறுப்பில் நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் காந்தி திமுக மாணவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வந்த பூவை சி. ஜெரால்டு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வந்த எஸ். மோகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக வர்த்தக அணி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்பு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு, திமுக மாணவர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவரணியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications