மக்களுடன் முதல்வர் திட்டம்.. சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. 1598 பேருக்கு பணிநியமன ஆணை.. சூப்பர்
சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அரசின் அனைத்து துறைகளுமே இப்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன... அதனால், அனைத்து துறைகளிலும் சேவைகளைப் பெற மக்கள் ஆன்லைன் வழியாகவே அணுக வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக, அடித்தட்டு மக்கள் இணைய வழியில் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால், அரசு சேவைகளைப் பெற பிறரின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எளிய சேவைகள்: அடித்தட்டு மற்றும் கிராமப்புற மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அவர்களும் எளிதாக அரசின் சேவைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் தொடங்கியிருக்கிறது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று மக்களின் மனுக்களை நேரடியாக பெறுவர் எனவும் ஏற்கனவே நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் திட்டம்: இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இந்த விழா நடக்கிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது:
"அரசு அலுவலர்களை தேடிச் சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், மக்களின் நலன் நாடி நாள்தோறும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திடும் தமிழ்நாடு முதலமைச்சர், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்று குறை கேட்டுத் தீர்த்துவைத்திட வேண்டும் என்று விரும்பினார்.
கோரிக்கை மனுக்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வகையில், அரசு நிர்வாகத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் வகையில் முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்னும் ஒரு முன்னோடித் திட்டத்தை கோவை மாநகரில் 18.12.2023 அன்று தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் எரிசக்தித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, காவல்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் மூலம் மக்களுக்குப் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
அதிகாரிகள்: இந்த 13 அரசுத் துறை அதிகாரிகளுடன் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 35 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் மீது மக்கள் மன நிறைவு கொள்ளும் வகையில் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் பயன்பெற்ற மக்கள் முதலமைச்சரையும் இந்த அரசையும் பெரிதும் பாராட்டி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 16.2.2024 - வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில், மகத்தான வெற்றி கண்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பொதுப்பணி: மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்குகிறார்.
இந்த விழாவில், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும், பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வழங்கினார்: அதன்படி, மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications