தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பும் காங்கிரஸ்! ராகுலை தொடர்ந்து களமிறங்கிய மல்லிகார்ஜூன கார்கே
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகிறார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் பாஜக vs இந்தியா கூட்டணி என இருக்கிறது. இந்த தேர்தல் இரண்டு தரப்பினருக்குமே முக்கியமானதாகும். குறிப்பாக பாஜகவை பொறுத்த அளவில், இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற பொறுப்பை நரேந்திர மோடி பெறுவார். அதேபோல 2025ல் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம்.

மறுபுறம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸை பொறுத்த அளவில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் பல முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர். அதேபோல, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மாநிலங்கள் தற்போது கைநழுவியுள்ளன. எனவே, இந்த முறையும் ஆட்சிக்கு வரவில்லையெனில் ஒரேயடியாக கட்சியை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். அந்த சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
இந்நிலையில் தனது பரப்புரையை கட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை மேற்கொள்கிறார்.
பயண திட்டத்தின்படி, புதுவையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்து இன்று மதியம் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். அதேபோல கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலியில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இறுதியாக, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து வானூர் கோட்டக்குப்பத்தில் இரவு 7 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
கடந்த சில தினங்களாக பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு வந்திருந்த ராகுல் காந்திக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு பாஜக பரப்புரைக்கு பெரும் சவால் ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று மல்லிகார்ஜூனாவை இந்தியா கூட்டணி களமிறக்கியிருப்பது, தேர்தல் களத்தில் மேலும் சூட்டை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம்,
கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கடலூரில் விஷ்ணு பிரசாந்த், கிருஷ்ணகிரியில் கோபிநாத், நெல்லையில் ராபர்ட் புரூஸ், மயிலாடுதுறையில் சுதா, புதுவையில் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications