பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை!
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை கடந்த ஆண்டு ஏப்ரல்27,28 தேதிகளில் அந்நாட்டின் வுஹான் நகரில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்கள் இரு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடம் வகிக்கும் ஹூபே மாகாணத்தின் தலைநகர்தான் வுஹான். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஜின்பிங் இடையேயான சந்திப்பு இந்தியாவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்கு வாரணாசி உள்ளிட்ட பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் மாமல்லபுரத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புதியதாக வெளிநாட்டவர்கள் விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை மாமல்லபுர புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications