ஒட்டன்சத்திரம் கொத்தனாரு.. தொக்கா சிக்குனாரு! ஓடும் ரயிலில் செய்த அசிங்கம்.. தட்டித் தூக்கிய போலீஸ்!
சென்னை: சென்னையில் பகல் நேரங்களிலேயே மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயிலில் பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்துக்கு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது மின்சார ரயில்களை தான். குறைந்த செலவில் நீண்ட தூர பயணம் மற்றும் விரைவான பயணத்துக்கு மின்சார ரயில்களை தான் நம்பி இருக்கின்றனர்.
சென்னை கடற்கரை செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் ஆவடி மற்றும் கடற்கரை வேளச்சேரி மார்க்கங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த மின்சார ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கடந்த சில மாதங்களாகவே கேள்விக்குறியாகி வருகிறது. கொலை, கொள்ளை மற்றும் பாலியல் தொல்லை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் மின்சார ரயிலில் பயணித்த பெண் ஒருவர் கள்ளக்காதல் தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதிர்ச்சி தரும் விதமாக பெண் காவலர் ஒருவரையே பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மின்சார ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், போதிய பெண் காவலர்களை நியமிக்க வேண்டும், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக பட்ட பகலில் சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் மார்க்கத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் மார்க்கத்தில் நேற்று நண்பகலில் இளம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த ரயிலில் ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இதுகுறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தை தங்களது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அழகர் ராஜா என்பதும், சென்னையில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் நண்பகல் நேரங்களில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளை குறிவைத்து அவர் இதுபோன்று தொடர்ந்து அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த திருவான்மியூர் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ரயில் பெட்டிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் பெண்கள் இதுபோன்று ஏதாவது ஒரு சங்கடமான சூழலை சந்தித்தால் உடனடியாக காவல்துறைக்கும் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications