"பிரம்புகள், உடைந்து கிடந்த பற்கள்!" போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் மரணம்! நடந்தது என்ன-பரபர தகவல்
சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜி (45). இவர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
அதனால், அவரை மது போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க, அவருடைய குடும்பத்தினர் ராஜியை, சென்னை ராயப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
ராஜி இதற்கு முன்னரும் கூட, சிலமுறை இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள இந்த தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி நேற்று (மே 2) அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய மனைவிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் ராஜியின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனைக்குச் சென்ற ராஜியின் குடும்பத்தினரிடம் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புகார்
நல்ல உடல்நிலையில் இருந்த ராஜி திடீரென உயிரிழந்ததால், அவரது மனைவிக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி, இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உடைந்த பற்கள்
போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட ராஜி மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து, போலீசார் தனியார் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். காவல் துணை ஆணையர் பகலவன் தலைமையிலான குழு மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கே உடைந்த நிலையில் பிரம்பு கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த ராஜியின் உடலிலும் பிரம்பால் அடித்த தடம் இருப்பதாகவும், வாயில் பல் அனைத்தும் உடைந்திருப்பதாகவும் அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

5 பேர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்












Click it and Unblock the Notifications