"அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.." மாணிக்கம் தாகூர் பரபர பதிவு.. செல்வப்பெருந்தகைக்கு பதிலடியா
சென்னை: கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என தலைமை அறிவித்து இருந்தும் சர்சையாக பேசி வந்த மாணிக்கம் தாகூர் குறித்து தலைமையிடம் புகார் தெரிவித்து இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்த நிலையில், "அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.. அச்சமென்பதில்லையே" என்ற பாரதியாரின் பாடல் வரியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார் மாணிக்கம் தாகூர்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் பங்கு விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வெளிப்படையாகவே பேசி வந்தனர். இதற்கு திமுகவினரும் எதிர்வினையாற்றி வந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு தமிழகத்தில் எடுபடாது என கூறிவிட்டார்.

இதனால் இந்த விவகாரம் இப்படியே முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி ஆட்சியில் பங்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருப்பரங்குன்றம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கட்சித் தலைமை அழைப்பின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூர் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் , மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த காங்கிரஸ் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி, கார்கே மற்றும் வேணுகோபால் தெரிவித்து இருக்கிறார்கள்.
அவர்களை விட யாரும் பெரியவர்கள் இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் தலைமை காட்டும் வழியில் செயல்படுபவன்தான் இந்த செல்வப்பெருந்தகை. இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் இந்த கருத்தை பேசுவது ஏன்?.. இப்படி பேசுவதை தவிரக்க வேண்டும்.
நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை மதிப்பவன்.. எங்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் தலைமையிடம் கூறுவோம். எனக்கு பேச தெரியும்.. நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக் கூறுவதற்கு எதற்கு கூட்டணி.. அது என்ன முறை, ஜனநாயகத்துக்கு முரணாக, காங்கிரஸுக்கு முரணாக யார் நடந்துகொண்டாலும் அது தவறு" என்றார்.
பின்னர் பெங்களூரில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து பேசினேன். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். தமிழ்நாட்டில் கடந்த 2, 3 நாட்களாக என்ன நடந்ததோ அதுகுறித்து அவ ரிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளேன்.
இதுகுறித்து எங்கள் அகில இந்திய தலைவர் மற்றும் மேலிடம் முடிவு எடுக்கும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து கட்சியின் தலைவர் தான் முடிவு எடுப்பார். கூட்டணி ஆட்சி சர்ச்சை தொடர்பாக தனக்கும் தெரியும் என்று கார்கே தெரிவித்தார்" என்று கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் மாணிக்கம் தாகூர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.. அச்சமென்பதில்லையே" என்ற பாரதியாரின் பாடல் வரியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார் மாணிக்கம் தாகூர்.












Click it and Unblock the Notifications