விஜய் கட்சி.. “முதலில் கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் முதலிரவு”.. காட்டமாக பேசிய மன்சூர் அலிகான்!
டெல்லி: டெல்லி சென்று தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், 'தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வந்தார். அண்மையில் குடியரசு தினத்தையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் அமைப்பை, ஜனநாயக தேசிய புலிகள் என மாற்றுவதாக அறிவித்தார்.

கோட் சூட் உடன் மன்சூர் அலிகான்: அதன்படி, தனது ஜனநாயக தேசிய புலிகள் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் மன்சூர் அலிகான். டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணைய அலுவலகமான நிர்வாசன் சதனில் தனது கட்சி பெயரை பதிவு செய்தார் மன்சூர் அலிகான். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார் மன்சூர் அலிகான்.
நடிகர்கள் கட்சி தொடங்குவதில் உடன்பாடில்லை: அப்போது பேசிய அவர், “நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை நான் நடிகனாக நினைக்கவில்லை. 1991ல் தான் எனது முதல் படம் வெளிவந்தது. அதற்கு முன்பே பல அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். 1987லேயே ஆதித்தனார் அவர்களை தமிழர் தந்தை என போட்டதை ஒரு நாளிதழ் கேவலமாக விமர்சித்தது. அப்போது நான் நடனக் கலைஞராக இருந்தேன். அப்போதே மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றேன்.
தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் காவிரி போராட்டம், இலங்கைத் தமிழருக்கான போராட்டம், ஆளுநர் மாளிகைக்கு எதிராக கிரிக்கெட் விளையாடும் போராட்டத்தை நடத்தினேன். நடிகன் ஆவதற்கு முன்பே அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டேன். இப்போது ஒரு முடிவோடு இறங்கி இருக்கிறேன். பல்லாவரத்தில் மாநாடு நடத்த உள்ளேன்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எனது கட்சியில் சேர்ந்துள்ளனர். 15 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளார்கள். அவர்களுக்கு பொறுப்புகள் அளித்து, கட்சி வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுமைக்கும் உரிமைக்காக போராடுவேன். நான் விடப்போவதில்லை. உண்டு, இல்லை, கொலை குத்துதான். அதிரடி அரசியல், உறியடி பதவிகள்.
முதலில் கல்யாணம், அப்புறம் ஃபர்ஸ்ட் நைட்: நடிகர் விஜய் புதிதாக 'தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் போன்றோவர்களுடன் நீங்கள் இணைந்து செயல்படலாமே, தனியாக கட்சி தொடங்குவதற்கான நோக்கம் என்ன என செய்தியாளர் ஒருவர் மன்சூர் அலிகானிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், “முதலில் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் முதலிரவு பற்றி பேசலாம்.” என்றார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குனா நான் ஓடிப்போய் பதுங்கிக்கணுமா? - மன்சூர் அலிகான் ஆவேசம்!
முன்னதாக, விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக செய்திகள் வந்தபோதே அதுபற்றி பேசிய மன்சூர் அலிகான், “அவர் அரசியலுக்கு வந்தால் நான் ஓடி போய் பதுங்கிக்கணுமா? விஜய் தற்போது “G.O.A.T" படத்தில் நடித்து வருகிறார் கோட்ன்னா ஆடு தானே.. பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்போம். நாளைக்கு அவர் கட்சி தொடங்குகிறார், இவர் கட்சி தொடங்குகிறார். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு பயமில்லை. எங்களுடைய கட்சியினுடைய கொள்கைகள் தான் முக்கியம்.” எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications