நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு! மன்சூர் அலிகான் விரைவில் கைது செய்யப்படுகிறாரா?
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியிருந்தார் மன்சூர் அலிகான். இது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.
மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் சேர்த்து குஷ்புவையும் பேசியிருந்தார். இந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனது சீனியரிடம் பேசியுள்ளேன். அவரை சும்மா விடக் கூடாது என போட்டிருந்தார். இந்த நிலையில் இதனிடையே நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மன்சூர் அலிகான் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications