சென்னை மழை.. உதவி எண்கள் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார்.. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி
சென்னை: வெள்ள பாதிப்பு தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள தொடர்பு எண்களுக்குக் கால் செய்தால் எப்போதும் பிஸி என வருவதாகவும் சில எண்கள் தவறான எண்கள் என வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கித் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாகச் சென்னையில் பெய்து வரும் கனமழையால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என்பதால் மீட்புப் பணிகளைச் சென்னை மாநகராட்சி தீவிரமாக எடுத்து வருகிறது.

பள்ளிகள்
குறிப்பாகத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு ஏற்ப தலைநகர் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைத் திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதையும் மின் இனைப்புகள் பிரச்சினையின்றி இருப்பதையும் உறுதி செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் வெள்ள பாதிப்பு உதவிகளைப் பெற தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உதவி எண்கள்
அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1913, 04425619206, 04425619207, 04425619208 எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், தவறான நம்பர் என்றே வருகிறது. அதேபோல 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 ஆகிய எண்களைப் பல முறை முயற்சி செய்தும் பிஸி என்றே வருகிறது.

வேலை செய்யவில்லை
வெள்ள பாதிப்புகள் தொடர்பாக 94454 77205 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் செய்தால் யாரும் பதில் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையின் ட்விட்டர் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்களுக்குக் கால் செய்தாலும் தவறான நம்பர் என்றே வருகிறது. உதவி எண்களை அறிவித்துவிட்டு, அது வேலை செய்யாமல் இருந்தால் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இதனால் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications