வடிவேலு பாணியில் எடப்பாடி தந்த பதில்! ராமர் கோயில் விழாவைப் புறக்கணித்த தலைவர்கள்!
சென்னை: ராமர் கோயில் திறப்பு விழா விவகாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி அந்த விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று கூறி இருக்கிறது.
'மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். ஆனால் பாஜக அயோத்தி ராமர் கோயிலை தங்களின் அரசியல் புராஜெக்ட் ஆக மாற்றி உள்ளது' என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழாவுக்காகப் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் சில தினங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட அழைப்பிதழில் ஆங்கில எழுத்தில் போடப்பட்ட Invitation என்பதற்குப் பதிலாக Invitaion எனத் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. அதைப்போல் Extraordinary என்பதற்குப் பதிலாக Extraordinare என்றும் தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
ஆகவே அந்த அழைப்பிதழை சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்டு அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டி இருந்தனர். இவ்வளவு பிரம்மாண்டமான விழாவின் அழைப்பிதழ் இப்படியா தப்பும் தவறுமாக அச்சிடுவது எனக் கண்டித்திருந்தனர்.

கூகுளில் Ramar temple என்று தேடினாலே Ramar temple invitation spelling mistake என்று மூன்றாவது இடத்தில் காட்டுகிறது. அந்தளவுக்கு இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்போது அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்த பல தலைவர்கள் அந்த அழைப்பை நிராகரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் தலைவர் கார்கேவும் சோனியா காந்தியும் தங்களுக்கு வந்த அழைப்பை நிராகரித்து இருக்கின்றனர்.
'ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம்' என்று தெரிவித்துள்ளனர். ராமர் கோயிலை அரசியல் திட்டமாக பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் மாற்றிவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் கட்சி பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கப்போவதில்லை என்றும் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கலந்து கொள்ள மாட்டார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'ராமர் கோயில் விழாவின் மூலம் பாஜக வித்தைக் காட்டி வருகிறது. மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்று கூறியுள்ளார்.
இவரைப் போலவே ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், 'பாஜக ஸ்பான்சர் செய்யும் நிகழ்வுபோல் உள்ளது' என்று விமர்சித்துள்ளார்.

'இந்தியா' கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, 'ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லப் போவதில்லை' என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரோ, '2024 தேர்தலைச் சந்திக்க பாஜகவுடன் எந்தக் கொள்கை திட்டங்களும் இல்லை. ஆகவேதான் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் பார்க்கிறது' என்று மிகக் காட்டமாகத் தாக்கி பேசி இருக்கிறார். ஆகவே, இவரும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றே தெரிகிறது.
'ராமர் பகவான் அழைத்தால் நாங்கள் அனைவரும் செல்வார்கள். இவர்கள் அழைத்தால் நாங்கள் போகமாட்டோம்' என்று கூறியிருக்கிறார் அகிலேஷ் யாதவ். இதேபோல் 'ராமரை பாஜக வேட்பாளராக மட்டும்தான் பாஜக இன்னும் அறிவிக்கவில்லை' என்று உத்தவ் தாக்ரேவின் சிவசேனா விமர்சித்துள்ளது.

பகவான் ராமரை பாஜக அரசியல்வாதியாக்கிவிட்டதாக' என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தொடக்கக் காலத்திலிருந்தே ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவதை எதிர்த்து வருகிறது. அந்தக் கட்சியின் கொள்கையாக இது நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆகவே, அக்கட்சி பிரதிநிதிகள் யாரும் கட்டாயம் கலந்துகொள்ள மாட்டார்கள்.

ஆனால், அதிமுக அப்படியல்ல; ராமர் கோயில் கட்டுவதற்காக கரசேவை நடைபெற்றபோது தமிழ்நாட்டிலிருந்து செங்கல் அனுப்பியவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் அவர். இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தனக்குக் கால்வலி உள்ளதாகவும் வாய்ப்பு இருந்தால் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்றும் பட்டும் படாமல் பேசியுள்ளார்.
காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "ராமர் கோயில் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. நான்கில் ஒரு பகுதிதான் வேலைகள் முடிந்துள்ளன. ஆனால், அதற்குள் அவசர அவசரமாகத் திறக்கு உள்ளனர்.

அதற்குக் காரணம் என்னவென்றால், 2024 மக்களைவைத் தேர்தலில் இந்து மதத்தினரின் உணர்வுகளை இதன் மூலம் தூண்டிவிட்டு அரசியல் ஆதாரம் பெற நினைக்கிறது பாஜக.
ராமர் கோயிலை இந்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு பிரதமர் மோடி சென்று செய்யக் கூடாது. இதை அரசியலாக்க நினைக்கிறார்கள். எனவே நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லை, பூரி சங்கராச்சாரியாரே சொல்லி இருக்கிறார்.
இந்தக் கோயிலைக் கட்டியது அரசின் சாதனை. அது பாஜகவின் சாதனை அல்ல. அப்படிச் சொல்லவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில் பாஜகவுக்கு மட்டும் ராமர் சொந்தமில்லை. இந்து மதத்தினர் அனைவருக்கும் அவர் சொந்தம்" என்கிறார்












Click it and Unblock the Notifications