ப்பா.. தமிழக அரசியலே தலைகீழாக மாறிப்போச்சு.. எத்தனை திடீர் சர்ப்ரைஸ்.. டுவிஸ்டுகள்.. தலை சுற்றுது!
சென்னை: தமிழகம் எதிர்கொள்ளும் இந்த சட்டசபை தேர்தல் களம் ரொம்பவே விசித்திரமாக உள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தில் பலரும் வான வேடிக்கை காட்டப் போகிறார்கள் என்று நினைத்திருந்தால்.. "ஆளை விடுங்க சாமி.." என்ற குரல்கள்தான் ஆங்காங்கு எதிரொலிக்கிறது.. களத்தை காலி செய்தவண்ணம் இருக்கின்றனர் தலைவர்கள்.
தேர்தல் களத்தை விட்டு காலி செய்தவர்களில் கடைசியாக வந்து சேர்ந்துள்ளார், அர்ஜுன மூர்த்தி. இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் திடீரென கட்சி துவங்கினாரே அந்த அர்ஜுன மூர்த்திதான்.
தேர்தலுக்கு வாக்குறுதியெல்லாம் வெளியிட்ட அவர், இப்போது தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

பல வித்தியாசங்கள்
2021 சட்டசபை தேர்தல் பல விந்தைகள் நிறைந்தது. கட்சி ஆரம்பித்துவிட்டு அரசியலுக்கு வராதவர்கள் என்று மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பே வராமல் டிமிக்கி கொடுத்தவர்கள்.. கட்சியை மட்டும் களமிறக்கிவிட்டு, தாங்கள் நைசாக போட்டியிடாமல் ஒதுங்கியவர்கள், கடைசி நேரத்தில் கட்சியே இந்த தேர்தலில் களம் காணாது என ஓட்டம் பிடித்தவர்கள் என வித விதமான அரசியல் சூழ்நிலைகளை தமிழகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

விந்தையான தேர்தல் களம்
ஒவ்வொரு விந்தையாக, வரிசையாக பார்க்கலாம் வாருங்கள். அரசியலுக்கு வருவார் என்று அகில இந்தியாவையும் எதிர்பார்க்க வைத்துவிட்டு, யாரும் எதிர்பார்க்காமல் யூ டர்ன் அடித்ததில் இருவருக்கு முக்கிய பங்கு உண்டு. அதில் முதலாமவர்.. ரஜினிகாந்த். 2 வருடங்களாகத்தான் அவர் கட்சி ஆரம்பிப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தபடி இருந்தார். அதற்கு முன்பே மறைமுக பஞ்ச் வசனங்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகளை சந்திப்பது, அரசியல் கருத்துக்கள் சொல்வது என்ற அளவில் மட்டுமல்லாது, கட்சிக்கு நிர்வாகிகளையும் நியமித்தார் ரஜினி.

ரஜினியடித்த பல்டி
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று நினைத்து பாஜகவிலிருந்து அங்கே போய் சேர்ந்தார். அங்கு, பொறுப்பாளர் என்ற பதவியை தந்தார் ரஜினிகாந்த். ஆனால், பதவியை கொடுத்த ரஜினி, கட்சியே ஆரம்பிக்காமல் போய்விட்டார். உடல்நிலையை காரணம் காட்டி திடீரென அவர், கடந்த டிசம்பர் மாதம், திடீரென அந்தர் பல்டியடித்தார். கட்சியும் இல்லை, அரசியலும் இல்லை.. ஆளை விடுங்க சாமிகளா என்று திடீரென தனது டிரேட் மார்க் கும்பிடை போட்டு ஒதுங்கிவிட்டார். இந்த முடிவை கேட்டு தலை சுற்றல், நெஞ்சு வலி என பல உடல் உபாதைகளுக்கு ஆளாகினர் அவரது ரசிகர்கள். அப்புறமாக மனசை தேற்றிக்கொண்டு திமுகவிலும், அதிமுகவிலும் சிலர் ஐக்கியமாகிவிட்டனர்.

பயங்கர டுவிஸ்ட் இது
இந்த பட்டியலில் 2வது இடம், சசிகலாவுக்கு. இனி அவ்வளவுதான்.. ஓய்வுதான் எடுப்பார் என்று நினைத்தபோது, பெங்களூர் டூ சென்னைக்கு 23 மணி நேரம் டிராவல் செய்து வைத்து ஹைப் ஏற்றினார் சசிகலா. அரசியலுக்கு வருவேன் என சூளுரைத்தார். வரிசையாக அவர் வீட்டுக்கே போய் பார்த்தனர் பல அரசியல் தலைவர்கள். நாளுக்கு நாள் அரசியல் டென்ஷன் அதிகரித்துக் கொண்ட போனது. தேசிய ஊடகங்களின் கவனம் முழுக்க சசிகலாவை சுற்றியே இருந்தன. திடீரென ஒரு நாள் இரவோடு இரவாக, நான் அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக கூலாக அறிவித்தாரே பார்க்கலாம்... ரஜினியின் முடிவை விட இது பெரிய டிவிஸ்ட். "என்ன நடக்கிறது.. நான் எங்கே இருக்கேன்.." என்று, மயக்கம் தெளிந்து எழுந்திருக்கும் சினிமா கேரக்டர்கள் போல, சசிகலா ஆதரவாளர்கள் திருதிருவென விழித்தனர்.

தமிழருவி மணியன்
தேர்தலுக்கு முன்பே ஓடிப்போனவர்களில், முக்கியமானவர்கள் லிஸ்ட் இது. அடுத்து, எலக்ஷனை சந்திக்க ரெடியாகிவிட்டு, திடீரென தேர்தல் களத்தை விட்டே ஓடியவர்களும் உண்டு. அதில் டாப் 3 பேர் உள்ளனர். முதலில் ஓட்டம் பிடித்தவர் தமிழருவி மணியன். காந்திய மக்கள் இயக்கம் என்று நடத்தி வந்த அவர் ரஜினியை நம்பி போனார். சூப்பர்வைசர் பதவியை கொடுத்தார். ஆனால் கட்சியே துவங்காமல் ரஜினியடித்த பல்டியால், பதறிப்போனார் தமிழருவி மணியன். நடப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை அவரால். உட்கார்ந்து யோசித்து, யோசித்து பார்த்தார். "வரவிருக்கும் தேர்தலின் மூலம் எந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை. ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும். ஆனால், நெறி சார்ந்த நல்லரசியல் வாய்ப்பதற்கு வழியில்லை. எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில் இடம் பெற்று இரண்டு, மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தித் தன் இருப்பை வெளிப்படுத்தும் அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது". என்று அறிக்கை வெளியிட்டு, அரசியலுக்கே முழுக்குப் போட்டார் தமிழருவி மணியன்.

கருணாஸ் பல்டிகள்
இந்த லிஸ்டில் நேற்று புதிதாக இணைந்தவர், கருணாஸ். அதிமுகவுடன் கூட்டணி, பிறகு திமுகவுக்கு ஆதரவு, பிறகு எடப்பாடிக்கு ஆதரவு, பிறகு திமுகவுக்கு ஆதரவு என அரசியலில் அந்தர் பல்டிகளை அசால்ட்டாக அடித்தபடியே இருந்தவர்தான் கருணாஸ். இவரது பல்டிகளுக்கு அத்தனை கட்சிகளும் மொத்தமாக சேர்ந்து முற்றுப் புள்ளி வைத்தன. யாருமே சேர்க்காததால், தனது முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சி, தேர்தலையை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார் கருணாஸ்.

அர்ஜுன மூர்த்தி
கருணாசின் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே.. அதாவது இன்று.. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்தவர்தான் அர்ஜுன மூர்த்தி. 'கள பிரசாரம் உள்ளிட்டவற்றை குறுகிய காலத்தில் கையாள நமக்கு இடம் தரவில்லை. ரோபோ சின்னத்துக்கு தொழில்நுட்ப வரிசை படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்த குறுகிய காலமே இருந்தது. முழுமையான களப்பணியாற்ற முடியாததால் தேர்தலில் போட்டியிடவில்லை. எங்கள் கொள்கையின் அடிப்படையில் கள பலத்தை வளர்த்துக்கொள்வோம்' என்று தெரிவித்துவிட்டு தேர்தலுக்கு பெரிய கும்பிடு போட்டுள்ளார் அர்ஜுன மூர்த்தி.

சரத்குமார், ராதிகா
இதில் இன்னொரு வகை அரசியல்வாதிகளையும் இந்த தேர்தல் களம் பார்த்துள்ளது. அதில் முக்கியமானவர் சரத்குமார் மற்றும் ராதிகா. சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது. ஒரு கட்டத்தில், ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி கூட சரத்குமாரால் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. வேளச்சேரியில் ராதிகா போட்டியிடுவார் என்று அக்கட்சி பொதுக்குழுவில் கொளுத்திப் போடப்பட்டது. வேளச்சேரி கிடைக்காவிட்டால் கோவில்பட்டி கூட ஓகே என சீரியசாகவே சொன்னார் ராதிகா. ஆனால், வேட்பாளர் பட்டியலில் மட்டும் பெயர் மிஸ்சிங். அட அவராவது சின்னத்திரையில் பிஸியாகிவிடுவார். சரத்குமாருக்கு என்னாச்சு. அவரும் போட்டியிடவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் திடீரென வைகோ போட்டியிடாமல் விலகியதால், மக்கள் நலக் கூட்டணிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதை போல இப்போது மக்கள் நீதி மய்யத்தாருக்கு, சரத்குமாரால் சங்கடம்.

அன்புமணி
இந்த பட்டியலில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷையும், பாமகவின் அன்புமணி ராமதாசையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவர்கள், பதவியென்றால் எம்.பி. பதவிதான் என்ற வைராக்கியத்தில் இருப்பவர்கள். கடந்த பல தேர்தல்களாக லோக்சபா தேர்தலில்தான் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் மட்டும் பாமக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது. பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆசைக்கு முழுக்கு போட்டுவிட்டார். ஆனால், போட்டியிட அனைத்து வாய்ப்பும் கிடைக்கப்பெற்றும், சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் தவிர்ப்பவர்கள் என்று வேண்டுமானால் இவ்விருவரையும், சொல்லலாம்.

அமுங்கிப்போன அழகிரி
தேர்தல் களத்தில் சத்தமே இல்லாமல் அமுங்கிப் போனவர்கள் என்று கூட ஒரு கேட்டகிரி இருக்கிறது. இதில் அழகிரிக்கு முதலிடம். ஒரே இடம். தேர்தல் அறிவிக்கும் முன்பாக அவர் தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசித்ததும், மீடியாக்கள் தந்த முக்கியத்துவமும்.. ஏதோ பெரிய பிளான் வைத்திருக்கிறார் என்ற ரேஞ்சில் இருந்தது. ஆனால் மனிதன் இருக்கும் இடமே தெரியவில்லை. வெடித்து சிதறுவார் என எதிர்பார்க்கப்பட்டவர், புஸ்வானமாக மாறிப்போனார். திரை மறைவில் நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

சர்ப்ரைஸ்
எல்லாமே ஏமாற்றம்தானா இந்த தேர்தலில்.. நல்ல விஷயமே நடக்கவில்லையா.. என்று கேட்கிறீர்களா.. இருக்கே.. இதில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். முதலாமவர் கமல்ஹாசன். முதல் முறையாக அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் கமல் களமிறங்குகிறார் என்றதுமே, கொங்கு மண்டலம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. கட்சிக்கு முன் மாதிரியாக இருந்து வழி நடத்த ஆரம்பித்துள்ளார். இது "வெல்கம் மூவ்." தேர்தல் களத்தில் இன்னொரு புதுவரவு, பிரேமலதா விஜயகாந்த். இவருக்கும் இதுதான் முதல் சட்டசபை தேர்தல். விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தேர்தலில் போட்டியிடாத சூழலில், கட்சியை தானே முன்னின்று வழிநடத்தும் முனைப்போடு களம் காண்கிறார் பிரேமலதா. இது இப்போதைய லிஸ்டுதாங்க.. தேர்தலுக்கு முன்பு இன்னும் என்னென்ன, மாற்றங்களையும், சர்ப்ரைஸ்களையும் தமிழகம் தர காத்திருக்கிறதோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications