டிவி சீரியல்களால் தான் குடும்ப உறவு சிதறிப் போகிறது… குட்டு வைத்த சென்னை ஹைகோர்ட்
Recommended Video

சென்னை: திருமண உறவை மீறிய பந்தம் அதிகரிக்க தொலைக்காட்சி சீரியல்கள் தான் காரணமாக இருக்கிறதா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது .
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திருமண பந்தம் மீறிய தவறான உறவு தண்டனைக்குரிய குற்றமில்லை என தீர்ப்பளித்தது.
சமூகத்தின் பார்வைக்காக பெண்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஆணுக்கு உள்ளது போலவே, பெண்ணுக்கும் சுதந்திரம் உள்ளது என்றும், பெண்ணுக்கு ஆண் எஜமானனாக இருக்கமுடியாது என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

குண்டர் சட்டத்தை ரத்து செய்க
இந்தநிலையில், திருமண உறவை மீறிய பந்தம் வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜித் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

நீதிபதிகள் கேள்வி
திருமண உறவை மீறிய பந்தம் அதிகரிக்க தொலைக்காட்சி சீரியல்களும், திரைப்படங்களும் காரணமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆண் மற்றும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதால் பொருளாதார சுதந்திரம் இதுபோன்ற பந்தம் அதிகரிக்கிறதா எனவும் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் திருமண உறவை மீறிய பந்தத்தை ஏற்படுத்த ஒரு தளத்தை உருவாக்குகிறதா எனவும் கேள்வியெழுப்பினார்.

மேற்கத்திய கலாச்சாரம்
மேலும், மேற்கத்திய கலாச்சாரமும், மதுவுக்கு அடிமையான வாழ்க்கை முறையும் இதுபோன்ற பந்தத்தை உருவாக்க காரணமா என்றும் கூட்டுக் குடும்ப முறை மறைந்ததும் காரணமா என்றும் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி தலைமையில் குழு
இதுதவிர நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது விருப்பமில்லாதவரை திருமணம் செய்து கொள்வதால் திருமண உறவை மீறிய பந்தம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உளவியல் ரீதியான சிகிச்சை , உதவித்தொகை வழங்குவது குறித்து தீர்மானிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்தால் என்ன எனவும் ஆலோசனை வழங்கினர். இது தொடர்பாக ஜூன் மாதம் 21-ஆம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீரியல் மோகம்
முன்னதாக, சீரியல்களில் இருந்து செய்தி தொலைக்காட்சிகளுக்கு மக்களின் கவனம் திரும்பியுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்தது . கடந்த மாதம் மதுரையை சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர் தனியார் கட்டண சேனல்கள் விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கில் இவ்வாறு கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications