பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்
செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கி வரப்போகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7:47 மணியளவில் நிகழவுள்ளது இதனை வெறும் கண்களால் பார்க்கலாம்.
சென்னை: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் நெருங்கி வரப்போகிறது. இந்த அதிசய நிகழ்வு இந்திய நேரப்படி நிகழப்போகிறது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செவ்வாய் சிவப்பு நிற கிரகம். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு போர் வீரன் என்ற பெயரும் தளபதி என்றும் அழைக்கின்றனர். செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியாவின் இஸ்ரோ மங்கள்யான் செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் பற்றிய ஆராய்ச்சியை மங்கள்யான் மேற்கொண்டது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம் உள்ளதா எனவும், மீத்தேன் வாயு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தது மங்கள்யான். செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வினை பல நாடுகளும் செய்து வருகின்றன.
செவ்வாய் கிரகம் இன்று இரவு பூமிக்கு வெகு அருகில் நெருங்கி வருகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது.
இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணியளவில் நிகழவுள்ளது. இந்த ஆண்டு ஆண்டு இறுதிவரை தினசரியும் சூரிய அஸ்தமனத்திற்கு பின், செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பின், இந்த நிகழ்வானது 2035ல் தான் நிகழும்.
பூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகும். அதேபோல செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும்.
இன்று இரவு பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகம் தெற்கு வானில் இரவு முழுவதும் தெரியும் மற்றும் நள்ளிரவில் பிரகாசமாக தெரியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.