1000 ரூபாய் எப்போது கிடைக்க போகுது தெரியுமா.. மாதத்தை அறிவித்த திமுக அமைச்சர்.. பூரிக்கும் பெண்கள்
1000 ரூபாய் மகளிருக்கு எப்போது தரப்படும் என்பது குறித்து தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
சென்னை: திமுக அரசு வாக்குறுதியாய் அறிவித்திருந்த, 1000 ரூபாய் எப்போது பெண்களுக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இதுகுறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, அத்தொகுதி மக்களிடம் பேசும்போது திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். அப்போது, மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்..
"கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதுக்குள்ளே, சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.

கருணாநிதி மகன்
இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்று இருக்கிறது.. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி நாங்கள் செய்து வருகிறோம்... எப்படியும், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன்... ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

முத்தாய்ப்பு
மகளிருக்கான 1000 ரூபாய் எப்போது தரப்படும் என்ற கேள்வி கடந்த ஒன்றரை வருட காலமாகவே எழுந்து வரும்நிலையில், பட்ஜெட்டில் இந்த 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக முதல்வர் ஸ்டாலினே சொல்லியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அப்போது தந்திருந்தது.. அதேபோல, மார்ச் 8 மகளிர் தினத்தன்று, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், "அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார்.

மல்லாங்கிணறு
அதேபோல கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் 5 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார்" என்று கூறி உறுதிப்படுத்தியிருந்தார்..
இந்நிலையில், இதே தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசும் தெரிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுப் பெண்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு சான்றிதழ் வழங்கி பேசும்போதும் இதே தகவலை தெரிவித்துள்ளார்.

ஹேப்பி நியூஸ்
"திராவிட மாடல் அரசின் உன்னத திட்டம், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்குவது. அது இன்னும், 3 அல்லது மாதங்களில் வழங்கக்கூடிய நாள்வரும். இந்த தமிழ் மண்ணில் மங்கையராகப் பிறந்ததற்கே மாதம் ஆயிரம் வழங்கும் அற்புதத் திட்டம் அது. ஏற்கெனவே மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், பெண் மாணவிகளுக்கு உதவித்தொகை என அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது திராவிட மாடல் அரசு. நம் தமிழகம் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் இந்திய நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான். தமிழகத்திலும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்..

கருணாநிதி பர்த்டே
ஆக, விரைவில் நடக்கவுள்ள பட்ஜெட்டில் இந்த 1000 ரூபாய் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.. பட்ஜெட்டின் ஆரம்ப கட்ட பணிகளை நிதித்துறையினர் கடந்த ஜனவரியிலேயே துவங்கிவிட்டனர்.. அது சம்பந்தமான துறை அதிகாரிகளும், தங்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.. அமைச்சரவை கூட்டத்தில் இவைகளை எல்லாம் ஆராய்ந்து இறுதி செய்யப்பட வேண்டியது மட்டுமே எஞ்சியிருந்த நிலையில்தான் திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால், அமைச்சர்களும் தொகுதிக்கு சென்று அங்கேயே முகாமிட்டு, தேர்தல் வேலைகளை கவனிக்க வேண்டியிருந்ததால், பட்ஜெட் பணிகள் தடைபட்டன. இப்போது, மீண்டும் வேகம் எடுத்துள்ளன.. ஒருவேளை பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானாலும்கூட, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்..!!












Click it and Unblock the Notifications