"8ஆம் வகுப்பு மாணவர்கள் கணக்கு பாடத்தில் கொஞ்சம் வீக்” சர்வேயால் வெளிவந்த தகவல்.. விளக்கிய ஜெயரஞ்சன்
சென்னை: "8ஆம் வகுப்பு மாணவர்கள் MATHS பாடத்தில் சற்று வீக் ஆக உள்ளனர். அதற்கு கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததும் ஒரு காரணம்." என திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, துணை முதலமைச்சரும் - மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 'கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கை' (State Level Achievement Survey)-ஐ வழங்கினர்.

மாநில கல்வித் தரம் பற்றிய ஆய்வறிக்கையை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த பின்னர் இந்த அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார் திட்டக் குழுவின் செயல் துணைத்தலைவர் ஜெயரஞ்சன்.
ஜெயரஞ்சன் பேட்டி
பள்ளிக் கல்வியில் வெவ்வேறு வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் திட்டம் வைத்திருக்கிறோம். ஒன்றாம் வகுப்பு முடித்தால் மாணவர்களுக்கு இவ்வளவு தெரியும், மூன்றாம் வகுப்பு முடித்தால் மாணவர்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என ஒரு அளவு திட்டமிட்டு வைத்திருப்போம். அவுட்கம் அந்த அளவுக்கு இருக்கிறதா என்பதை சோதிப்போம்.
4 வருடங்களுக்கு ஒருமுறை அறிதல் நிலையை மத்திய அரசு, என்.ஜி.ஓ ஆகியோர் மதிப்பீடு செய்வார்கள். முதல் முறையாக மாநில அரசாக நாம் இதனை மதிப்பீடு செய்துள்ளோம். எழுத்துகள், எண்களை கற்றுக் கொள்வது முதல் நிலை. 4வது 5வது வகுப்புக்கு செல்லும்போது அறிந்து கொள்வதற்காக படிக்க வேண்டும்.
மாணவர்களிடம் சர்வே
அடுத்த நிலை, 8வது வரும்போது என்ன தெரிந்திருக்கிறது என்பது பற்றி சர்வே எடுத்து மதிப்பிட்டுள்ளோம். அதுகுறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அதிகமான எண்ணிக்கையில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களிடம் சர்வே எடுத்துள்ளோம்.
எந்த மாவட்டங்கள், எந்த ஒன்றியங்கள் நன்றாக பெர்ஃபார்ம் செய்துள்ளன. எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் நன்றாக கற்றுக் கொள்கிறார்கள் என்பதை எல்லாம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம். மற்ற பாடங்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே செயல்பாடு உள்ளது. கணக்கு பாடத்தில் மட்டும் ஒரு தொய்வு இருக்கிறது.
கணக்கு பாடத்தில் தொய்வு
குறிப்பாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் கணக்கு பாடத்தில் ஒரு தொய்வு இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் 2 ஆண்டுகள் திறக்கப் படாததன் காரணமாக இந்த தொய்வு ஏற்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. என்ன செய்தால் இதனை இன்னும் மாற்றலாம் என்பது குறித்த பரிந்துரைகளை அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மாநில திட்டக்குழு
தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். செயல் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன், மல்லிகா சீனிவாசன், ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோரும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications